Apr 17, 2016

பெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும்

தந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன்.

நவீன உலக வரலாற்றில் இரண்டு கொள்கைகள் உலகை புரட்டி போட்டன.

1. காரல்மார்க்சின் கம்யூனிச கொள்கை 
2. தந்தை பெரியாரின் திராவிடக் கொள்கை

இதில் கம்யூனிச கொள்கைகளை உலகின் பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்க்க தொடர்ந்து கம்யூனிச தலைவர்கள் முயன்று வருகிறார்கள். ஆனால் தந்தை பெரியாரின் திராவிடக் கொள்கைகளை தமிழகத்துக்குள்ளேயே முடக்க திராவிட தலைவர்கள் முயல்கிறார்கள்.

புரிந்து கொள்ள சுருக்கமாக சொல்கிறேன்

பொருளாதார சமத்துவம் கம்யூனிச கொள்கை
சமூக சமத்துவம் திராவிடக் கொள்கை

சமூக சமத்துவத்தையும் உள்ளடக்கிய பொருளாதார சமத்துவம் கம்யூனிசம் - என கம்யூனிச தலைவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

அது சரியே. 

ஆனால் இதில் எங்கோ ஒரு பிழை இருப்பதை தந்தை பெரியார் கண்டறிந்தார். அந்த பிழையை சரி செய்யத் தான் திராவிடக் கொள்கைகளை முன்மொழிந்தார்.

கம்யூனிசத்துக்கும் & திராவிடத்துக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால் நுண்ணிய வேறுபாடுகள் இருக்கிறது. 

சுரண்டியவனிடம் இருந்து சுரண்ட பட்டவனுக்கு பொருளாதாரத்தை பிடிங்கி தர வேண்டும் என்கிறது கம்யூனிசம்.

அதாவது பணக்காரன் ஏழையின் நிலைக்கு இறங்க வேண்டும் என்கிறது கம்யூனிசம்.

அதற்கு நேர்எதிர்மாறாக அதே நேரத்தில் அதே இலக்கை அடைய சொல்கிறது திராவிடம்.

ஏழை பணக்காரன் நிலைக்கு உயர வேண்டும் என்கிறது திராவிடம்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை அளித்து, உயர்நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது திராவிட கொள்கை. 

எளிமையாக புரியும்படி சொன்னால்

பசித்தவனுக்கு உடனடியாக மீனை கொடு என்கிறது கம்யூனிசம். பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன்பிடிக்கும் ‘உரிமையைக்’ கொடு என்கிறது திராவிடம்.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் சமநிலைக்கு வரமுடியும் என்றார் பெரியார்.

இதையும் கம்யூனிசம் வலியுறுத்துகிறது என்கின்றனர் கம்யூனிச தோழர்கள்.

உண்மை தான். ஆனால் பெரியார் சொல்லும் நுட்பம் இன்னும் ஆழமானது.

அந்த ஆழமான கேள்வி இது தான்

யார் ஒடுக்கப்பட்டவர்கள்?

இங்கே தான் கம்யூனிசமும் பெரியாரியமும்(திராவிடம்) வேறுபடுகிறது.

ஆரியார் அல்லாத அனைவரும் ஒடுக்கப்பட்டவர்கள் என அடையாளம் காட்டுகிறார் பெரியார். அந்த அடையாளத்திற்கு பெயர் தான் திராவிடம்.

ஆரியம் & திராவிடம் என்ற பிரிவினை பேச்சே தேவையற்றது என்கிறது கம்யூனிசம்.

ஆரியன் அனுபவித்த சுகபோகத்தை திராவிடனும் அனுபவிக்க வேண்டும், அதுவரை திராவிடம் தேவை என்கிறது பெரியாரியம்.

எல்லோரும் எளிமையாக வாழலாம் என்கிறது கம்யூனிசம்
எல்லோரும் ஆடம்பரமாக வாழலாம் என்கிறது பெரியாரியம்.

ஆரியன் ஆடம்பரமாக வாழ்ந்து விட்டான். அவன் எளிமையாக வாழட்டும். திராவிடன் எளிமையாக வாழ்ந்துவிட்டான். அவன் ஆடம்பரமாக வாழவே வேண்டாமா? இது தான் பெரியாரின் கேள்வி!

நீ நேற்றுவரை அனுபவித்த சுகத்தை நானும் அனுபவித்துக்கொள்கிறேன். பின்னர் இருவரும் ஒரு சமநிலைக்கு வருவோம் என்கிறார் பெரியார்.
 - தொடரும்.

No comments:

Post a Comment

Popular Posts